View My Stats
Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Wednesday, April 15, 2026

நீளிரா...

 நீளிரா



இயக்குனர் சோமி, தயாரிப்பாளரான பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் வெளிப்படையான உரையாடல் காணொளியொன்றை இன்று YouTube, Facebook இரண்டிலும் பதிவேற்றவுள்ளேன்.
படம் பார்த்த பிறகு மனதில் எழுந்த உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதோடு, இருந்த கேள்விகளையும் கேட்டிருந்தேன். அதற்கு முதல்...
இலங்கையின் வடபுல மொழி வழக்கை இதுவரை காலம் வந்த தென்னிந்தியத் திரைப்படங்களில் மிக நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறது நீளிரா.
இதுவரை கோலிவூட்டில் எந்தவொரு படைப்பாளியும் தொட்டிராத, இந்திய தணிக்கையினால் வெட்டுக்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய ஒரு விடயத்தை இரு பக்க கூர்வாள் போன்ற ஒரு கதையை பாதிக்கப்பட்ட பக்கம் நின்று அறவழி பேசியிருக்கிறார் சோமிதரன்.
சிறுவயது முதலே எம் இனம் குறித்து ஆர்வமும் உணர்வும் கொண்ட ஒரு மாணவனாகவும் பின்னாளில் தேடல் கொண்ட இளம் ஊடகர், ஆவணப் படைப்பாளியாகக் கண்டிருந்த சோமிதரனின் உழைப்பும் நேர்த்தியும் பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
எனினும் திரைப்படமாக வரும் நேரம் இருக்கும் கட்டுப்பாடுகள், நடைமுறைகளின் படி சோமி நினைத்த கதையை இயல்பாகத் தரமுடியுமா என்பது தான் Trailer பார்த்த பிறகும் எனக்கான கேள்வியாக இருந்தது.
எனினும் போர்க்காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையின் அனுபவப்பகிர்வு - 1988இல் IPKF என்ற பெயரில் அமைதிக்காக இலங்கைக்கு வந்து பின் எம் வாழ்வில் இதுவரை காலம் நாம் கண்ட சொல்லொணாக் கொடுமைகளைத் தந்த இந்தியப் படைகளின் அட்டூழியத்தின் சாட்சியங்களின் ஓரிரவை இயல்பு மீறாமல் பதிவிட்டிருக்கிறார் திரைப்படமாக.
களம், காட்சியமைப்பு, பாத்திரங்கள், எம் தமிழ்ப் பேச்சு வழக்கு, வலிகளை உணர்த்தும் வசனங்கள் + முகபாவங்கள் என்று மினக்கெட்டு செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சோமி.



இந்த நீளமான ஓரிரவு (நீள் + இரா - என்னவொரு அழகான கவித்துவமான தலைப்பு) ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மூலம் அந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பல நிகழ்வுகளை பல கொடுமைகளை சில வசனங்கள் மூலமாகவும் காட்டிவிடுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த என் போன்றோருக்கு நாம் கண்ட, கேட்ட சம்பவங்களை நினைவுகள் மூலமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.
அதில் வரும் வயதான தாத்தா பாத்திரம் (அதிகம் விவரித்தால் கதையைச் சொல்லிவிடுவேன்) சம்ஸ்கிருத/தமிழ் பண்டிதராக இருந்த என் பாட்டா(அப்பாவின் அப்பா)வை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தது.
IPKF டாங்கிகள் சகிதம், பலாலியிலிருந்து அடித்த ஷெல்களுடன் எங்கள் ஊர்ப்பக்கம் வந்த நேரத்தில் நாம் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அகதிகளாக செல்ல முடிவெடுத்தபோது தனக்கு சம்ஸ்கிருதம் தெரியும் தன்னைச் சுடமாட்டார்கள் என்று பிடிவாதம் பிடித்து நின்றவரைக் காலில் சுட்டுவிட்டுத் தான் போனார்கள் 'அமைதி' காக்கும் படையினர்.
இதுபோன்ற பல சம்பவங்களை அழுத்தமான வசனங்களும் ஏன் சிறு சிறு காட்சியின் உருவகங்களும் காண்பிக்கின்றன.
(விளையாட்டு) துப்பாக்கி இல்லாமல் எப்படி விளையாடுவது என்று தாயிடம் கேட்கும் சிறுவன்
முதலில் இந்த வீட்டுக்குள் அமைதியைக் கொண்டுவரப் பாருங்கோ என்னும் அம்மா
உலகில் எந்தப் போர் அமைதிக்காக நடந்திருக்கிறது என்று கேட்கும் பெரியவர் (மனிதாபிமான யுத்தம் செய்த ஶ்ரீ லங்கா இராணுவம் உள்ள நாடல்லவா நம் நாடு)எத்தனை பேரிடம் மன்னிப்புக் கேட்பீர்கள்
எங்கள் கண்முன்னே அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரைப் பாத்திரங்களாகவும் நாம் உணர்ந்த, அனுபவித்த மற்றும் கேட்டறிந்த சம்பவங்களை அந்த ஓரிரவின் நீட்சியில் உணர்த்துவதும் யாழ் வைத்தியசாலை படுகொலைகள், கொக்குவிலில் இவர்கள் நிகழ்த்திய படுபாதகங்களை உரையாடல்கள் வழியாகக் கொண்டுவருவதும் சோமியின் திறமை.
அந்தக் காலகட்டத்தில் நடந்த அத்தனையையும் கொண்டுவர இது ஒன்றும் போரியல் படமோ அல்லது சோமியின் முன்னைய ஆவணப் படங்கள் போன்றதோ அல்ல..
அன்றைய நாளில் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் /ஓரிரவு வாழ்க்கை !
அத்தனை நெருக்கடி மத்தியிலும் வயிற்றில் நெருப்பையும் கையில் எந்நேரமும் அடையாள அட்டையையும் வைத்துக்கொண்டும் கூட தமக்கேயுரிய மகிழ்ச்சியான பொழுதுகள், பாசம், காதல், இலட்சியம் என்று வாழ்ந்த எம் இனம் பற்றிய ஒரு முக்கியமான பதிவு.
சோமியிடம் நான் சொன்னேன் - சம்பவத்தின் கோர்வைகளாக ஒரு தரமான சிறுகதையை நல்ல படமாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று.
இதன் சிறப்பே இயல்பு மாறாமை. இதற்கு சோமிதரனுக்கு உறுதுணையாக இசையும் ஒளிப்பதிவும் கலை இயக்குனரின் குழுவும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
குறைகள் சொல்ல முடியாத, எம் படைப்பாளிகளுக்கும் எம் கதையை எதுவித சமரசமும் செய்துகொள்ளாமல் அதேவேளையில் வர்த்தக சினிமாவாகக் கொண்டுவரப்போகும் படைப்பாளிகளுக்கும் நம்பிக்கை தரக்கூடிய நீளிராவின் வெற்றியை உறுதிப்படுத்த எம்மாலான பங்களிப்பை வழங்கவேண்டியது எம் கடமை.
படம் : Sujeewa Kumar

Sunday, April 12, 2026

ஜனநாயகன் Leak !

 தமிழ்நாட்டிலுள்ள என் நண்பர், அவர் ஒரு விஜய் ரசிகர்.

ஜனநாயகன் லீக் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.



யார் இதைக் கசிய விட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், இது கசிவெல்லாம் இல்லை, முழுமையான தரமான HD தரத்தில் unofficial releaseஏ ஆகியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டவர், இதன் மூலமாக யாருக்கு இலாபம் என்ற விடயத்தில் எதிரிகள் அப்படி செய்திருந்தால் தமக்கே குழி தோண்டிவிட்டார்கள் என்றார்.
தனக்குக் கிடைத்த linkஇல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டதாகச் சொன்னார்.
அடப்பாவி அப்போ தியேட்டரில் பார்க்கும் விஜய் ரசிகரின் வைராக்கியம் என்னவாச்சு என்று கேட்டேன்..
TVK Tattoo எல்லாம் போட்டு தேர்தலுக்கான பிரசாரப்படத்தை தேர்தல் முடிஞ்சபிறகு திரையில் பார்த்து யாருக்கு என்ன பயன் என்று எனக்கு பதில் கேள்வி போட்டார். ம்ம்ம் சரி தான் !
"கோடிகளை விட்டிட்டு மக்களுக்காக வந்திருக்கிற நம்மாள் இன்னும் பல கோடிகளைக் கொட்டி தனக்கு வாக்குக் கேட்டு ஒரு High Budget பிரசாரப் படம் எடுத்திருக்காரு ப்ரோ. இப்ப தான் அதைப் பார்க்கணும்" என்று தெளிவாக சொல்லிட்டார்.
படம் எப்படி என்று கேட்டேன்.
"H.வினோத் என்றால் அவரது முதல் இரண்டு படம் தான் ப்ரோ, தளபதி விஜய் என்று வந்தால் அவரது கடைசி இரண்டு படங்களை மறந்திடணும் ப்ரோ"
Okay !

Tuesday, September 24, 2013

இணைக் கிளியும் துணைக் கிளியும் - ஒரு இரண்டாம் உலகக் குழப்பம்


இரண்டாம் உலகம் படத்தில் வரும் ​ மன்னவனே என் மன்னவனே​ பாடலைக் கேட்டபோது அவதானித்த விடயம்...​

​"மன்னவனே என் மன்னவனே​​
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வி​ண்​மீ​ன்கள்​ தேடி தேடி எங்கே அ​லை​வேன்"

​என்று பெண் குரல் காதலோடு தேட,​

​ஆண்குரல் பாடும் இந்த வரிகள் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளன...​

 "உன் இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா"

​அதாவது இது காதலன் - காதலி பாடும் பாடல் இல்லையா?

இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி - காதலன் வரும் வரை காவலன்??

கவிஞர் வைரமுத்துவின் வரிகள் மூலமாக இயக்குனர் செல்வராகவன் வைக்கும் ட்விஸ்ட் என்னவென்று அறிய ஆவலுடன் படத்துக்காக வெயிட்டிங்.​

ஏற்கெனவே இரு உலகம் ஒரு கதை என்றும், இரட்டை வேடங்களில் நாயகன் ஆர்யாவும், நாயகி அனுஷ்காவும் என்று பலவிதமாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் பாடலும் சேர்ந்து சுவாரஸ்யமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

குழம்பிக்கொண்டே காத்திருப்போம்.


ரசித்துக்கொண்டே குழம்பியிருப்போம்.


​தொடர்ந்து ஆண்குரல் இவ்வாறே கொஞ்சம் சோகத்துடன் இது காதல் இல்லை என்று மறைமுகமாக சுட்ட, பெண் குரலில் வரும் பாடல் வரிகள் காதலோடு உருகுகிறது.​

ஆ​ண் ​: வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியு​ற ​ நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா


பெ​ண்​: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா

தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
​மொ​த்த கத முடிஞ்சதே


#இரண்டாம் _உலகம் #வைரமுத்து #பாடல்

Friday, August 2, 2013

வையகம் வாழவிடு - வைரமுத்து இயற்கையிடம் மனிதருக்காக

சகத்திர ஆண்டு - 2000 (எழில் அண்ணாவால் அறிமுகமான வார்த்தை) பிறக்கும் காலகட்டத்தில் வைரமுத்துவின் இந்தப் பாடல் தான் என் நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடிக்கும்.

ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு

பிறந்த புதிய நூற்றாண்டுக்காக அப்போது 'சக்தி'யில் நான் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலின் பல வரிகளை சிலாகித்து இயற்கையிடம் மனிதத்தின் வேண்டுகோள்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

13,14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு தடவை இந்தப் பாடலை எனது 'சூரிய ராகங்கள்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய நேரமும் இந்தப் பாடல் அதே போல புதிதாக, அதே இனிமையும் , பாடலின் 'இளமையும்' 'புதுமையும்' மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

அதே போல, வைரமுத்து புதிய நூற்றாண்டிடம் வேண்டிய வேண்டுகோள்கள் 'எல்லாமே' இன்னமும் நிறைவேறாமலேயே கிடக்கின்றன.

பாடலின் எல்லா வரிகளும் ரசனையுடையவையாக  ஆழமாக உணர்ந்து மனதோடு இயைந்த சில வரிகளை அன்று கத்தரித்து ஒலிபரப்பியதும், இன்றும் ஞாபகம் வைத்திருப்பதும் கவிஞரின் வெற்றியாக இருந்தாலும், பாடகர் நவீன், உதித்  நாராயணன் பாணித் தமிழ் உச்சரிப்பில் பாடலின் ஜீவனை சிதைத்திருக்கிறார் என்பது கொடுமையிலும் கொடுமை.

தண்ணீரில் மூழ்காது என்பதை 'மூள்காது' என்று பாடிய K.J.யேசுதாசையே கண்டித்துத் திருத்திய கவிஞர் வைரமுத்து, தன் அழகான அர்த்தமுள்ள பாடலின் அர்த்தங்களையே சீரழித்துள்ள பாடகர், அதுவும் புதிய பாடகரைத் திருத்தாமல் விட்டது ஆச்சரியமே...

பாடலின் சரியான வரிகளைத் தரவேண்டும் என்று உன்னிப்பாக அவதானித்து ஓரளவுக்கு இங்கே பதிந்துள்ளேன்.
எனினும் இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளைத் தேடியபோது எல்லா இடங்களிலும் ஒரே மூலப்பிரதியின் பிழைகளோடு அர்த்தங்களே மாறிப்போய்க் கிடப்பதைக் கண்டேன்.

கவிஞர் சரியான வரிகளைத் திருத்திப் பதிவேற்றினால் திருப்தி.
அல்லது கவிஞரின் மகன் கார்க்கி தன் பாடல்களைப் பதிவேற்றுவது போல, தந்தையாரின் பாடல்களையும் தொகுத்தால் மகிழ்ச்சியே.

மனம் ரசிக்கும், மனிதத்தை நேசிக்கின்ற சில முக்கிய வரிகள்...

ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு 
இந்த சொற்களின் வலிமை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.

ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
எங்கள் உலகம் இப்போது தேடும் நிம்மதிக்கான விஷயங்கள் இவை. ஆனால்  சாத்தியமில்லைத் தான்.

பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா

இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா

பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா

இப்போது என் சின்ன மகனின் வாழ்க்கையில் அனுபவரீதியாக உணரும் நிலை.

மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு

இந்த வரிகளில் கவிஞர் சிலிர்க்கவும் வியக்கவும் வைக்கிறார்.
வைரமுத்துவை இன்னொருவர் விஞ்ச முடியுமா என்று ரசிக்க வைக்கிற பல இடங்களில் ஒன்று இது.
நாம் வரும் வாடகை வீடான  பூமியில் நாம் விரும்பும்வரை வாழவிட்டால் என்ன என்ற கேள்வி நியாயமானதே.
ஆனால் யாரிடம் கேட்பது?


படம்: முகவரி
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: தேவா
பாடியவர்: நவீன்


ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு

வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு 

நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத ஒரு பூமியை நீ கொண்டு வா

இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
சாதி பார்க்காமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா

புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு



ஆண்டுகள் கடந்து மறைந்தாலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பாடல் ஒலித்து  பிறகு 
"மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு" 
என்ற வரிகள் ஓயாமல் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைத் தவிர்க்கமுடியாது.


Thursday, November 11, 2010

தீனா சுட்ட முருகன் பாடல்..

அண்மையில் வெளிவந்து அனைவரது காதுகளையும் ரம்மியமாக்கி இருக்கும் வல்லக்கோட்டை திரைப்படப் பாடல் 'செம்மொழியே செம்மொழியே' (கலைஞர் எழுதி,இசைப் புயலின் இசையில் வந்த செம்மொழியே பாடல் அல்ல..)
கவிஞர் தபூஷங்கர் எழுதிய அழகான வரிகளை தமிழ்த் திரையுலகின் அற்புத ஜோடி,காலத்தை வென்ற குரல்வளம் கொண்ட S.P.பாலசுப்ரமணியம்+S.ஜானகி பாட தீனா இசை அமைத்துள்ளார்.


ஆனால் கொடுமை இறுவட்டில்,வானொலியில் கேட்ட ஜானகி குரலைத் திரைப்படத்தில் கேட்கமுடியவில்லை. வேறு யாரோ ஒரு பாடகியை வைத்து பாட வைத்துள்ளார்கள்.
இன்றும் இளமை ததும்பும் ஜானகி அம்மையாருக்கு மரியாதை தரவாவது திரையிலும் அவர் குரலையே பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கலாம்.

அற்புதமான காதல் வரிகளைத் தந்த தபூஷங்கரையும் பாடல் காட்சி காயப்படுத்தி இருக்கும்.
மென்மையான வரிகள் கொண்ட பாடல் திரையில் அள்ளித் தருவதோ கவர்ச்சிக் காட்சியை.




பாடலைக் கேட்டீர்களா? 
இணையமெங்கும் தேடியும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க காட்சியுடன் பாடல் கிடைக்கவில்லை.
(அதற்காக இந்தப் பாடலுக்காக வல்லக்கோட்டை பார்த்து இரண்டரை மணி நேரத்தையும் உங்கள் பணத்தையும் வீணாக்காதீர்கள்)

பிற்சேர்க்கை - காட்சியுடன் பாடல் - கவர்ச்சி விருந்தும் சேர்ந்து

தீனாவின் மெட்டமைப்பையும் இசையமைப்பையும் நீங்கள் மெச்சி இருந்தால் அடுத்த பாடலைக் கீழே கேட்டு விட்டு ஒன்றில் உங்களை நீங்களே நொந்துகொள்வீர்கள்.. இல்லையேல் தீனாவை மனதுக்குள் நீங்கள் அறிந்த கெட்ட வார்த்தைகளால் வைது தீர்ப்பீர்கள்..




இந்த முருக பக்திப்பாடல் T.M.சௌந்தரராஜன் பாடியது.
இசையமைத்தவர் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன்.

எப்படியெல்லாம் உருவி,உல்டா செய்கிறார்கள் பாருங்கள்..

தேவா கந்தர் சஷ்டி கவசத்தை உல்டா செய்து பதினெட்டு வயது (சூரியன் படப் பாடல்) பாடலாக்கினார்.
இப்போது தீனா இன்னொரு பிரபல முருகன் பாடலை உல்டா ஆக்கியுள்ளார்.

இன்று இந்துக்களின் கந்தர் சஷ்டி விரதத்தின் இறுதி நாள்..
அதற்கான சிறப்புப் பதிவாக பக்த கோடிகள் நினைத்துக்கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

நேற்று வல்லக்கோட்டை (நொந்து,வெந்து) பார்த்த பிறகு மனதில் தோன்றிய பதிவு இது..


செம்மொழி என்று ஆரம்பித்தாலே சர்ச்சை தானா? 
  ஒரு வேளை முருகன் தமிழ்க் கடவுள் என்பதனால் துணிச்சலோடும் உரிமையோடும் முருகன் பாடல்களை சினிமாவுக்குள் எடுக்கிறார்களோ???