View My Stats

Sunday, May 3, 2026

இணையத்தைச் சூடாக்கிய அந்த “ஆணுறை ( Condom) விளம்பரம்”

 இணையத்தைச் சூடாக்கிய அந்த “ஆணுறை (Condom) விளம்பரம்”

சில விளம்பரங்கள் பொருளை விற்கும்.
சில விளம்பரங்கள் கருத்தை விற்கும்.
சில விளம்பரங்கள் — நம்மைச் சிரிக்கவைத்து, அதே நேரத்தில் கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.

அப்படி இணையத்தில் திடீரென தீப்பிடித்துப் பரவிய ஒன்று, பிரேசிலிய ஆணுறை விளம்பரம் எனச் சொல்லப்படும் ஒரு படைப்பு.



அக்காட்சியில் உலகத் தலைவர்கள் சிலர், ஒரு ஆணுறைக்குள் சிக்கிக்கொண்டு போராடுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அதனுடன் வந்த வாசகம் இன்னும் கூர்மையானது:

‘Some People Should Never Have Been Born'

“சிலர் பிறந்திருக்கவே கூடாது.”

சொல்லப்போனால், இது ஒரு சாதாரண விளம்பர வாசகம் அல்ல.
இது நேராக நெற்றியில் ஒட்டப்படும் அரசியல் நையாண்டி.

ஆனால் இதில் ஒரு திருப்பம் இருக்கிறது.

இது உண்மையில் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விளம்பரம் அல்ல. Platinum FMD நிறுவனத்தில் இருந்த ஒருவரின் சலிப்பு நேரப் படைப்பாகவே இது உருவானதாகச் சொல்லப்படுகிறது. சில உலகத் தலைவர்களை நையாண்டி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த கற்பனை விளம்பரம், அப்படியே உலக சந்தையில் ஓடிய விளம்பரம் அல்ல.

ஆனால் இணையம் எப்போது உண்மை, கற்பனை, நையாண்டி, கோபம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கிறதோ, அப்போது அதற்கே தனி உயிர் வந்து விடும்.

அப்படித்தான் இது நடந்தது.

Facebook-இல் உள்ள “We Resist” என்ற பக்கம் இதை பகிர்ந்ததும், படம் தீப்பற்றியது. மக்கள் சிரித்தார்கள். சிலர் கைதட்டினார்கள். சிலர் சினந்தார்கள். சிலர் “இதை உண்மையிலேயே ஒளிபரப்பியிருக்கலாமே!” என்றார்கள்.

நாம் பார்க்காத விளம்பரமே, பார்த்த விளம்பரங்களை விட அதிகம் பேசப்பட்டது. அதுதான் இணையத்தின் புதுக்கால விளம்பரத் தத்துவம்.

இன்னும் சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்த விளம்பரம் ஒரு பொருளை விற்கவில்லை. அது ஒரு மனநிலையை விற்றது.
“அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?” என்ற கேள்விக்கு, ஒரு குத்துச்சிரிப்பான பதில் கொடுத்தது.

நையாண்டி எப்போதும் நாகரிகமாக இருக்க வேண்டுமா?
அல்லது அது குத்திக் கிழிக்க வேண்டுமா?

அந்த விவாதம் வேறு.

ஆனால் ஒரு விஷயம் உறுதி:
இப்படி ஒரு விளம்பரம் உண்மையில் தொலைக்காட்சியில் வந்திருந்தால், prime time செய்திகளிலும், அரசியல் விவாதங்களிலும், social media போர்களிலும் பல நாட்கள் வாழ்ந்திருக்கும்.

சில விளம்பரங்கள் ஒளிபரப்பப்படாமலேயே புகழ்பெறும்.
சில கருத்துகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலேயே மக்களின் மனதில் ஒலிக்கும்.

இந்த “condom விளம்பரம்” அதில் ஒன்று.

அதன் வாசகம் கடுமையானது.
அதன் நகைச்சுவை கறுப்பாக (Dark Humour) இருந்தது.
அதன் அரசியல் நையாண்டி கூர்மையாக இருந்தது.

ஆனால் இணையம் அதை விரும்பியது.

ஏனெனில், சில நேரங்களில் மக்கள் விளம்பரத்தைப் பார்க்க விரும்புவதில்லை;
அவர்கள் தங்களின் கோபத்தை யாராவது புத்திசாலித்தனமாக வடிவமைத்துக் காட்டினால் போதும்.

அதுதான் இங்கே நடந்தது.

உண்மையான விளம்பரம் அல்ல.
ஆனால் உண்மையான எதிர்வினையை பெற்ற நையாண்டி.

இணையக் காலத்தில் அதுவே சில நேரங்களில் போதும்.

அதுசரி, இதே விளம்பரங்களில் இன்னும் உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டியவர்கள் இன்னும் யார் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? 🫣😉

Monday, April 27, 2026

இன்னும் ??

 வலைப்பதிவு, வலைப்பூ, வலையுலகம் என்று கோலாகலமாகக் கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக் காலம் நினைவிருக்கா?

இன்னும் இந்தப் பக்கம் போன்ற பதிவுகளை வாசிக்கும் நண்பர்கள் இருக்கிறீர்களா?

Wednesday, April 15, 2026

நீளிரா...

 நீளிரா



இயக்குனர் சோமி, தயாரிப்பாளரான பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் வெளிப்படையான உரையாடல் காணொளியொன்றை இன்று YouTube, Facebook இரண்டிலும் பதிவேற்றவுள்ளேன்.
படம் பார்த்த பிறகு மனதில் எழுந்த உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதோடு, இருந்த கேள்விகளையும் கேட்டிருந்தேன். அதற்கு முதல்...
இலங்கையின் வடபுல மொழி வழக்கை இதுவரை காலம் வந்த தென்னிந்தியத் திரைப்படங்களில் மிக நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறது நீளிரா.
இதுவரை கோலிவூட்டில் எந்தவொரு படைப்பாளியும் தொட்டிராத, இந்திய தணிக்கையினால் வெட்டுக்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய ஒரு விடயத்தை இரு பக்க கூர்வாள் போன்ற ஒரு கதையை பாதிக்கப்பட்ட பக்கம் நின்று அறவழி பேசியிருக்கிறார் சோமிதரன்.
சிறுவயது முதலே எம் இனம் குறித்து ஆர்வமும் உணர்வும் கொண்ட ஒரு மாணவனாகவும் பின்னாளில் தேடல் கொண்ட இளம் ஊடகர், ஆவணப் படைப்பாளியாகக் கண்டிருந்த சோமிதரனின் உழைப்பும் நேர்த்தியும் பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
எனினும் திரைப்படமாக வரும் நேரம் இருக்கும் கட்டுப்பாடுகள், நடைமுறைகளின் படி சோமி நினைத்த கதையை இயல்பாகத் தரமுடியுமா என்பது தான் Trailer பார்த்த பிறகும் எனக்கான கேள்வியாக இருந்தது.
எனினும் போர்க்காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையின் அனுபவப்பகிர்வு - 1988இல் IPKF என்ற பெயரில் அமைதிக்காக இலங்கைக்கு வந்து பின் எம் வாழ்வில் இதுவரை காலம் நாம் கண்ட சொல்லொணாக் கொடுமைகளைத் தந்த இந்தியப் படைகளின் அட்டூழியத்தின் சாட்சியங்களின் ஓரிரவை இயல்பு மீறாமல் பதிவிட்டிருக்கிறார் திரைப்படமாக.
களம், காட்சியமைப்பு, பாத்திரங்கள், எம் தமிழ்ப் பேச்சு வழக்கு, வலிகளை உணர்த்தும் வசனங்கள் + முகபாவங்கள் என்று மினக்கெட்டு செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சோமி.



இந்த நீளமான ஓரிரவு (நீள் + இரா - என்னவொரு அழகான கவித்துவமான தலைப்பு) ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மூலம் அந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பல நிகழ்வுகளை பல கொடுமைகளை சில வசனங்கள் மூலமாகவும் காட்டிவிடுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த என் போன்றோருக்கு நாம் கண்ட, கேட்ட சம்பவங்களை நினைவுகள் மூலமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.
அதில் வரும் வயதான தாத்தா பாத்திரம் (அதிகம் விவரித்தால் கதையைச் சொல்லிவிடுவேன்) சம்ஸ்கிருத/தமிழ் பண்டிதராக இருந்த என் பாட்டா(அப்பாவின் அப்பா)வை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தது.
IPKF டாங்கிகள் சகிதம், பலாலியிலிருந்து அடித்த ஷெல்களுடன் எங்கள் ஊர்ப்பக்கம் வந்த நேரத்தில் நாம் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அகதிகளாக செல்ல முடிவெடுத்தபோது தனக்கு சம்ஸ்கிருதம் தெரியும் தன்னைச் சுடமாட்டார்கள் என்று பிடிவாதம் பிடித்து நின்றவரைக் காலில் சுட்டுவிட்டுத் தான் போனார்கள் 'அமைதி' காக்கும் படையினர்.
இதுபோன்ற பல சம்பவங்களை அழுத்தமான வசனங்களும் ஏன் சிறு சிறு காட்சியின் உருவகங்களும் காண்பிக்கின்றன.
(விளையாட்டு) துப்பாக்கி இல்லாமல் எப்படி விளையாடுவது என்று தாயிடம் கேட்கும் சிறுவன்
முதலில் இந்த வீட்டுக்குள் அமைதியைக் கொண்டுவரப் பாருங்கோ என்னும் அம்மா
உலகில் எந்தப் போர் அமைதிக்காக நடந்திருக்கிறது என்று கேட்கும் பெரியவர் (மனிதாபிமான யுத்தம் செய்த ஶ்ரீ லங்கா இராணுவம் உள்ள நாடல்லவா நம் நாடு)எத்தனை பேரிடம் மன்னிப்புக் கேட்பீர்கள்
எங்கள் கண்முன்னே அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரைப் பாத்திரங்களாகவும் நாம் உணர்ந்த, அனுபவித்த மற்றும் கேட்டறிந்த சம்பவங்களை அந்த ஓரிரவின் நீட்சியில் உணர்த்துவதும் யாழ் வைத்தியசாலை படுகொலைகள், கொக்குவிலில் இவர்கள் நிகழ்த்திய படுபாதகங்களை உரையாடல்கள் வழியாகக் கொண்டுவருவதும் சோமியின் திறமை.
அந்தக் காலகட்டத்தில் நடந்த அத்தனையையும் கொண்டுவர இது ஒன்றும் போரியல் படமோ அல்லது சோமியின் முன்னைய ஆவணப் படங்கள் போன்றதோ அல்ல..
அன்றைய நாளில் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் /ஓரிரவு வாழ்க்கை !
அத்தனை நெருக்கடி மத்தியிலும் வயிற்றில் நெருப்பையும் கையில் எந்நேரமும் அடையாள அட்டையையும் வைத்துக்கொண்டும் கூட தமக்கேயுரிய மகிழ்ச்சியான பொழுதுகள், பாசம், காதல், இலட்சியம் என்று வாழ்ந்த எம் இனம் பற்றிய ஒரு முக்கியமான பதிவு.
சோமியிடம் நான் சொன்னேன் - சம்பவத்தின் கோர்வைகளாக ஒரு தரமான சிறுகதையை நல்ல படமாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று.
இதன் சிறப்பே இயல்பு மாறாமை. இதற்கு சோமிதரனுக்கு உறுதுணையாக இசையும் ஒளிப்பதிவும் கலை இயக்குனரின் குழுவும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
குறைகள் சொல்ல முடியாத, எம் படைப்பாளிகளுக்கும் எம் கதையை எதுவித சமரசமும் செய்துகொள்ளாமல் அதேவேளையில் வர்த்தக சினிமாவாகக் கொண்டுவரப்போகும் படைப்பாளிகளுக்கும் நம்பிக்கை தரக்கூடிய நீளிராவின் வெற்றியை உறுதிப்படுத்த எம்மாலான பங்களிப்பை வழங்கவேண்டியது எம் கடமை.
படம் : Sujeewa Kumar

Sunday, April 12, 2026

ஜனநாயகன் Leak !

 தமிழ்நாட்டிலுள்ள என் நண்பர், அவர் ஒரு விஜய் ரசிகர்.

ஜனநாயகன் லீக் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.



யார் இதைக் கசிய விட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், இது கசிவெல்லாம் இல்லை, முழுமையான தரமான HD தரத்தில் unofficial releaseஏ ஆகியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டவர், இதன் மூலமாக யாருக்கு இலாபம் என்ற விடயத்தில் எதிரிகள் அப்படி செய்திருந்தால் தமக்கே குழி தோண்டிவிட்டார்கள் என்றார்.
தனக்குக் கிடைத்த linkஇல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டதாகச் சொன்னார்.
அடப்பாவி அப்போ தியேட்டரில் பார்க்கும் விஜய் ரசிகரின் வைராக்கியம் என்னவாச்சு என்று கேட்டேன்..
TVK Tattoo எல்லாம் போட்டு தேர்தலுக்கான பிரசாரப்படத்தை தேர்தல் முடிஞ்சபிறகு திரையில் பார்த்து யாருக்கு என்ன பயன் என்று எனக்கு பதில் கேள்வி போட்டார். ம்ம்ம் சரி தான் !
"கோடிகளை விட்டிட்டு மக்களுக்காக வந்திருக்கிற நம்மாள் இன்னும் பல கோடிகளைக் கொட்டி தனக்கு வாக்குக் கேட்டு ஒரு High Budget பிரசாரப் படம் எடுத்திருக்காரு ப்ரோ. இப்ப தான் அதைப் பார்க்கணும்" என்று தெளிவாக சொல்லிட்டார்.
படம் எப்படி என்று கேட்டேன்.
"H.வினோத் என்றால் அவரது முதல் இரண்டு படம் தான் ப்ரோ, தளபதி விஜய் என்று வந்தால் அவரது கடைசி இரண்டு படங்களை மறந்திடணும் ப்ரோ"
Okay !

Thursday, March 30, 2017

நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai


வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இல்லை..
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை
நல்லை என்றவுடன் நல்லூர் எவ்வளவு ஞாபகம் வருகிறதோ, அல்லை என்றவுடன் யுத்தகாலத்தில் அடிக்கடி கேட்ட, வாசித்த அல்லைப்பிட்டியும் மனதில் நினைவுக்கு வந்துவிடும்.
ஆனால், //நன்னிலவே நீ நல்லை இல்லை// என்று நீ நல்ல நிலவு தான் ஆனாலும் நல்லவள் இல்லை என்று வர்ணிக்கும் தமிழின் செறிவும் துணிவும் ரசனையின் உச்சம்.

நல்லை அல்லை.. மீண்டும் மீண்டும் ரசிக்க ரசிக்க ....
என்றோ படித்த திருநாவுக்கரசரின் திருவொற்றியூர் திருத்தாண்டகம் ஞாபகம் வந்தது.
தற்போது மிக அரிதாக (அல்லது அறவே இல்லாத)அறு சீரடி, எண் சீரடியில் சந்தச்சுவை, தமிழின் இனிமை உணர்த்தும் தாண்டக வகைச் செய்யுள்களின் அருமையையும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய 'காற்று வெளியிடை'க்கும் வைரமுத்துவுக்கும் நன்றி..
திருஒற்றியூர் - திருத்தாண்டகம்
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

(மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை;
கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு
அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது
அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய
ஒற்றியூர் உடைய கோவே!.)
உரை - எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே. நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தையாயும் உள்ளாய்.

இதே நல்லை அல்லை சொல்லாடல் குறுந்தொகையிலும் கையாளப்படுள்ளதை வாசித்தறிந்தேன்..

“நல்லை அல்லை” சொல்லாடல் குறுந்தொகையின் 47வது பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்று. நெடுவெண்ணிலவினார் என்ற பெயரில் உள்ள கவிஞரால் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள இக்கவிதை, தோழிக் கூற்றாக அமைந்தது.
“கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.”
என்பது குறுந்தொகை 47வது பாடல்.
“நீண்ட நேரம் வானில் காயும் வெண்ணிலவே! கரிய அடியுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும். காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.” இதுவே அப்பாடலின் பொருள்.