Showing posts with label Neelira. Show all posts
Showing posts with label Neelira. Show all posts

Wednesday, April 15, 2026

நீளிரா...

 நீளிரா



இயக்குனர் சோமி, தயாரிப்பாளரான பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் வெளிப்படையான உரையாடல் காணொளியொன்றை இன்று YouTube, Facebook இரண்டிலும் பதிவேற்றவுள்ளேன்.
படம் பார்த்த பிறகு மனதில் எழுந்த உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதோடு, இருந்த கேள்விகளையும் கேட்டிருந்தேன். அதற்கு முதல்...
இலங்கையின் வடபுல மொழி வழக்கை இதுவரை காலம் வந்த தென்னிந்தியத் திரைப்படங்களில் மிக நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறது நீளிரா.
இதுவரை கோலிவூட்டில் எந்தவொரு படைப்பாளியும் தொட்டிராத, இந்திய தணிக்கையினால் வெட்டுக்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய ஒரு விடயத்தை இரு பக்க கூர்வாள் போன்ற ஒரு கதையை பாதிக்கப்பட்ட பக்கம் நின்று அறவழி பேசியிருக்கிறார் சோமிதரன்.
சிறுவயது முதலே எம் இனம் குறித்து ஆர்வமும் உணர்வும் கொண்ட ஒரு மாணவனாகவும் பின்னாளில் தேடல் கொண்ட இளம் ஊடகர், ஆவணப் படைப்பாளியாகக் கண்டிருந்த சோமிதரனின் உழைப்பும் நேர்த்தியும் பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
எனினும் திரைப்படமாக வரும் நேரம் இருக்கும் கட்டுப்பாடுகள், நடைமுறைகளின் படி சோமி நினைத்த கதையை இயல்பாகத் தரமுடியுமா என்பது தான் Trailer பார்த்த பிறகும் எனக்கான கேள்வியாக இருந்தது.
எனினும் போர்க்காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையின் அனுபவப்பகிர்வு - 1988இல் IPKF என்ற பெயரில் அமைதிக்காக இலங்கைக்கு வந்து பின் எம் வாழ்வில் இதுவரை காலம் நாம் கண்ட சொல்லொணாக் கொடுமைகளைத் தந்த இந்தியப் படைகளின் அட்டூழியத்தின் சாட்சியங்களின் ஓரிரவை இயல்பு மீறாமல் பதிவிட்டிருக்கிறார் திரைப்படமாக.
களம், காட்சியமைப்பு, பாத்திரங்கள், எம் தமிழ்ப் பேச்சு வழக்கு, வலிகளை உணர்த்தும் வசனங்கள் + முகபாவங்கள் என்று மினக்கெட்டு செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சோமி.



இந்த நீளமான ஓரிரவு (நீள் + இரா - என்னவொரு அழகான கவித்துவமான தலைப்பு) ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மூலம் அந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பல நிகழ்வுகளை பல கொடுமைகளை சில வசனங்கள் மூலமாகவும் காட்டிவிடுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த என் போன்றோருக்கு நாம் கண்ட, கேட்ட சம்பவங்களை நினைவுகள் மூலமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.
அதில் வரும் வயதான தாத்தா பாத்திரம் (அதிகம் விவரித்தால் கதையைச் சொல்லிவிடுவேன்) சம்ஸ்கிருத/தமிழ் பண்டிதராக இருந்த என் பாட்டா(அப்பாவின் அப்பா)வை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தது.
IPKF டாங்கிகள் சகிதம், பலாலியிலிருந்து அடித்த ஷெல்களுடன் எங்கள் ஊர்ப்பக்கம் வந்த நேரத்தில் நாம் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அகதிகளாக செல்ல முடிவெடுத்தபோது தனக்கு சம்ஸ்கிருதம் தெரியும் தன்னைச் சுடமாட்டார்கள் என்று பிடிவாதம் பிடித்து நின்றவரைக் காலில் சுட்டுவிட்டுத் தான் போனார்கள் 'அமைதி' காக்கும் படையினர்.
இதுபோன்ற பல சம்பவங்களை அழுத்தமான வசனங்களும் ஏன் சிறு சிறு காட்சியின் உருவகங்களும் காண்பிக்கின்றன.
(விளையாட்டு) துப்பாக்கி இல்லாமல் எப்படி விளையாடுவது என்று தாயிடம் கேட்கும் சிறுவன்
முதலில் இந்த வீட்டுக்குள் அமைதியைக் கொண்டுவரப் பாருங்கோ என்னும் அம்மா
உலகில் எந்தப் போர் அமைதிக்காக நடந்திருக்கிறது என்று கேட்கும் பெரியவர் (மனிதாபிமான யுத்தம் செய்த ஶ்ரீ லங்கா இராணுவம் உள்ள நாடல்லவா நம் நாடு)எத்தனை பேரிடம் மன்னிப்புக் கேட்பீர்கள்
எங்கள் கண்முன்னே அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரைப் பாத்திரங்களாகவும் நாம் உணர்ந்த, அனுபவித்த மற்றும் கேட்டறிந்த சம்பவங்களை அந்த ஓரிரவின் நீட்சியில் உணர்த்துவதும் யாழ் வைத்தியசாலை படுகொலைகள், கொக்குவிலில் இவர்கள் நிகழ்த்திய படுபாதகங்களை உரையாடல்கள் வழியாகக் கொண்டுவருவதும் சோமியின் திறமை.
அந்தக் காலகட்டத்தில் நடந்த அத்தனையையும் கொண்டுவர இது ஒன்றும் போரியல் படமோ அல்லது சோமியின் முன்னைய ஆவணப் படங்கள் போன்றதோ அல்ல..
அன்றைய நாளில் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் /ஓரிரவு வாழ்க்கை !
அத்தனை நெருக்கடி மத்தியிலும் வயிற்றில் நெருப்பையும் கையில் எந்நேரமும் அடையாள அட்டையையும் வைத்துக்கொண்டும் கூட தமக்கேயுரிய மகிழ்ச்சியான பொழுதுகள், பாசம், காதல், இலட்சியம் என்று வாழ்ந்த எம் இனம் பற்றிய ஒரு முக்கியமான பதிவு.
சோமியிடம் நான் சொன்னேன் - சம்பவத்தின் கோர்வைகளாக ஒரு தரமான சிறுகதையை நல்ல படமாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று.
இதன் சிறப்பே இயல்பு மாறாமை. இதற்கு சோமிதரனுக்கு உறுதுணையாக இசையும் ஒளிப்பதிவும் கலை இயக்குனரின் குழுவும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
குறைகள் சொல்ல முடியாத, எம் படைப்பாளிகளுக்கும் எம் கதையை எதுவித சமரசமும் செய்துகொள்ளாமல் அதேவேளையில் வர்த்தக சினிமாவாகக் கொண்டுவரப்போகும் படைப்பாளிகளுக்கும் நம்பிக்கை தரக்கூடிய நீளிராவின் வெற்றியை உறுதிப்படுத்த எம்மாலான பங்களிப்பை வழங்கவேண்டியது எம் கடமை.
படம் : Sujeewa Kumar