தண்ணீரில் மூழ்காது என்பதை 'மூள்காது' என்று பாடிய K.J.யேசுதாசையே கண்டித்துத் திருத்திய
கவிஞர் வைரமுத்து, தன் அழகான அர்த்தமுள்ள பாடலின் அர்த்தங்களையே சீரழித்துள்ள பாடகர், அதுவும் புதிய பாடகரைத் திருத்தாமல் விட்டது ஆச்சரியமே...
பாடலின் சரியான வரிகளைத் தரவேண்டும் என்று உன்னிப்பாக அவதானித்து ஓரளவுக்கு இங்கே பதிந்துள்ளேன்.
எனினும் இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளைத் தேடியபோது எல்லா இடங்களிலும் ஒரே மூலப்பிரதியின் பிழைகளோடு அர்த்தங்களே மாறிப்போய்க் கிடப்பதைக் கண்டேன்.
கவிஞர் சரியான வரிகளைத் திருத்திப் பதிவேற்றினால் திருப்தி.
அல்லது கவிஞரின் மகன் கார்க்கி தன் பாடல்களைப் பதிவேற்றுவது போல, தந்தையாரின் பாடல்களையும் தொகுத்தால் மகிழ்ச்சியே.
மனம் ரசிக்கும், மனிதத்தை நேசிக்கின்ற சில முக்கிய வரிகள்...
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு
இந்த சொற்களின் வலிமை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
எங்கள் உலகம் இப்போது தேடும் நிம்மதிக்கான விஷயங்கள் இவை. ஆனால் சாத்தியமில்லைத் தான்.
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா
இப்போது என் சின்ன மகனின் வாழ்க்கையில் அனுபவரீதியாக உணரும் நிலை.
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
இந்த வரிகளில் கவிஞர் சிலிர்க்கவும் வியக்கவும் வைக்கிறார்.
வைரமுத்துவை இன்னொருவர் விஞ்ச முடியுமா என்று ரசிக்க வைக்கிற பல இடங்களில் ஒன்று இது.
நாம் வரும் வாடகை வீடான பூமியில் நாம் விரும்பும்வரை வாழவிட்டால் என்ன என்ற கேள்வி நியாயமானதே.
ஆனால் யாரிடம் கேட்பது?
படம்: முகவரி
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: தேவா
பாடியவர்: நவீன்
ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு
வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு
நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத ஒரு பூமியை நீ கொண்டு வா
இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
சாதி பார்க்காமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா
புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு
ஆண்டுகள் கடந்து மறைந்தாலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பாடல் ஒலித்து பிறகு
"மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு"
என்ற வரிகள் ஓயாமல் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைத் தவிர்க்கமுடியாது.