Wednesday, October 7, 2015

நீயே உனக்கு ராஜா - தூங்காவனம் - உலக நாயகனுக்காக கவிப்பேரரசுவின் தீப்பொறி வரிகள்

திரைப்படம் : தூங்காவனம்
பாடலை எழுதியவர் : கவிப்பேரரசு வைரமுத்து 
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : 'பத்மஸ்ரீ' கமல்ஹாசன், ஐஸ்வர்யா, யாசீன் நிசார்



நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை 
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல்வேளையில் கடல் தூங்குமா?
அதுபோல் இவன் தூங்காவனம் 

எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே..
முன்னேற்றம் உனதே நண்பா 
எந்தத் துக்கமும் உனக்குத் தடையே இல்லையே 
எல்லாமே வெற்றியே நண்பா 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா


வேலை வீசியே, வாளை ஏந்தியே 
வெளிச்சத்தை யாரும் கொல்ல முடியாது...
ஜீவஜோதியாய் நீயும் மாறினால் 
அழிவே கிடையாது...

உன் கொள்கை நெஞ்சம் 
அது தூங்காவனம் 


தோல்வி என்பதே ஞானவெற்றி தான் 
துணிந்தால் கடல்களும் தொடையளவே 
உள்ளம் என்பது என்ன நீளமோ 
அதுதான் உனதளவே 
உன் துள்ளும் உள்ளம் 
அது தூங்காவனம் 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை 
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல்வேளையில் கடல் தூங்குமா?
அதுபோல் இவன் தூங்காவனம் 

எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே..
முன்னேற்றம் உனதே நண்பா 
எந்தத் துக்கமும் உனக்குத் தடையே இல்லையே 
எல்லாமே வெற்றியே நண்பா 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

-----------------------------------

நீயே உனக்கு ராஜா பாடல் படமாக்கப்படும் விதம்...
தூங்காவனத்தின் தீப்பொறி பறக்கும் - நீயே உனக்கு ராஜா பாடல் | Neeye Unakku Raja Official Making Video




உலக நாயகன் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' - விறுவிறுப்பான புதிய Thoongaavanam - Official Trailer - #2 

Wednesday, March 26, 2014

ஒரு சுடர் இரு சுடர் - ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே



அஜித் - விஜய் இணைந்து நடித்த ஒரே படம் என்பதைத் தாண்டி வேறெந்த முக்கியத்துவமோ வரலாறோ இல்லாத படம்.

ஆனால் முத்து முத்தான பாடல்கள்.
முக்கியமாக மூன்று பாடல்கள்.

இளையராஜாவின் மும்முரமான பணிகளில் அருண்மொழி இசைப் பணிகளை மேற்பார்வை பார்த்து, பின்னணி இசையும் வழங்கிய படம்.
(கானா பிரபா அண்ணரின் வானொலிப் பேட்டியில் அருண்மொழியே சொல்லியிருந்தார்)

இந்தப்படத்தில் எப்போதும் எனக்குப் பிடித்த அருண்மொழி பாடிய அம்மா பாடல் "அம்மன் கோவில் எல்லாமே" எப்போதுமே மனதுக்கு மிக நெருக்கமானது..

இன்னொரு அருண்மொழி பாடிய பாடல், இவள் யாரோ வான் விட்டு என்று ஆரம்பிக்கும் பாடல்.. (இன்னொரு நாள் பொற்காலப் புதனுக்காக வைத்துள்ளேன்)

இன்னொரு பாடல் இன்று காலையில் ஒலிபரப்பியிருந்தேன்.

ராஜாவின் பார்வையிலே - ஒரு சுடர் இரு சுடர்...

சூரியன் இசைக் களஞ்சியத்தில் காணாமல் போயிருந்த பாடலைத் தேடியெடுத்து ஒலிபரப்பும் வாய்ப்பு பொற்காலப் புதன் மூலம் கிடைத்திருந்தது.

மனோ, ஜானகியுடன் கோரஸ் பாடியுள்ளோரின் குரலிசையும் இனிய அனுபவம் தரக்கூடியது.

இளையராஜா டச்சைத் தாண்டி ஸ்பெஷலாக இந்தப் பாடலில் அருண்மொழி துருத்தித் தெரிகிறாரோ என்று ஒரு ஐயம்.
(பாடலின் இசை மேற்பார்வையும் இசைக் கோர்ப்பும் அருண்மொழி தானா ? அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நாட்டுப்புறப் பாட்டு படத்திலும் உள்ள பாடல்களைக் கேட்கும்போதும் இதே உணர்வு. அந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பும் நம்ம அருண்மொழி தான்)

பாடலின் ஜாதி போடும் இசைக்கோலம், வரிகளின் ஜாலம், அதுபோல மனோ சிற்பியின் வருகையின் பின்னர் மாறிய குரலோடு இல்லாமல், அதற்கு முன் பாடிய தன் இயல்பான குரலில் காதல் வழிந்தோடும் குரலில் பாடியிருப்பது சுகம்.
ஜானகி அம்மையார் குழைகிற இடங்களும் ரசனையுடன் இன்னொரு இசைக் கருவி மீட்டுவது போலவே இருக்கும்.

இதெல்லாவற்றையும் விட இந்தப் பாடலில் முக்கிய பாடக, பாடகியரை விட கோரஸ் பாடகியர்க்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும்.
பாடலின் ஆரம்பத்தில் ஜானகி பாட முதலே கோரஸ் குரல்கள் பாடலை நகர்த்திச் செல்லும் நயமும், பாடல் முழுவதும் கோரஸ் ஒலிகள் பாடலுக்கு தனி வர்ணம் கொடுப்பதும் புதுமை.

அவதாரம் படத்தில் இதே மாதிரி தென்றல் வந்து தீண்டும் போது பாடலில் இசைஞானி விளையாடி இருப்பார்.
எஜமான் பட - ஒரு நாளும் உன்னை மறவாத, ஆலைப்போல் வேலைப் போல்
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - வந்தாள்வந்தால் ராஜகுமாரி பாடல்கள் உடனே ஞாபகம் வந்த மேலும் சில உதாரணங்கள்.

கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்...

அட பாருங்கள் என்னும்போது தான் விஜய் பற்றியும் சொல்லவேண்டி இருக்கிறது.
காதல் படங்களைத் தேர்ந்து நடிக்கும் காலத்தில் (பூவே உனக்காக, லவ் டுடே) இவருக்கான அடையாளமாக இருந்த அந்த அசைவும், நளினமான நடனமும் இந்தப் பாடலிலும் பாருங்கள்.

இந்திரஜா, இவர் தான் பின்னர் மின்சாரக் கண்ணாவிலும் விஜய்யோடு ஜோடி சேர்ந்தவர்.



ரசனையான இந்தப்பாடலை இன்று கேட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு பாடலும் ஞாபகம் வர, அந்தப் பாடலின் ஆரம்ப இசையை ஒரு சில வினாடிகள் ஒலிபரப்பிக் காட்டியிருந்தேன்...



இரண்டுமே இசைஞானியின் இசை தான்..
மலைக்கோவில் ரஜினியால் பிரபலமாகிப் போனது.

ஆனால் இரண்டு பாடல்களுமே கேட்க கேட்க சுகம் தான்.

Tuesday, September 24, 2013

இணைக் கிளியும் துணைக் கிளியும் - ஒரு இரண்டாம் உலகக் குழப்பம்


இரண்டாம் உலகம் படத்தில் வரும் ​ மன்னவனே என் மன்னவனே​ பாடலைக் கேட்டபோது அவதானித்த விடயம்...​

​"மன்னவனே என் மன்னவனே​​
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வி​ண்​மீ​ன்கள்​ தேடி தேடி எங்கே அ​லை​வேன்"

​என்று பெண் குரல் காதலோடு தேட,​

​ஆண்குரல் பாடும் இந்த வரிகள் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளன...​

 "உன் இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா"

​அதாவது இது காதலன் - காதலி பாடும் பாடல் இல்லையா?

இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி - காதலன் வரும் வரை காவலன்??

கவிஞர் வைரமுத்துவின் வரிகள் மூலமாக இயக்குனர் செல்வராகவன் வைக்கும் ட்விஸ்ட் என்னவென்று அறிய ஆவலுடன் படத்துக்காக வெயிட்டிங்.​

ஏற்கெனவே இரு உலகம் ஒரு கதை என்றும், இரட்டை வேடங்களில் நாயகன் ஆர்யாவும், நாயகி அனுஷ்காவும் என்று பலவிதமாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் பாடலும் சேர்ந்து சுவாரஸ்யமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

குழம்பிக்கொண்டே காத்திருப்போம்.


ரசித்துக்கொண்டே குழம்பியிருப்போம்.


​தொடர்ந்து ஆண்குரல் இவ்வாறே கொஞ்சம் சோகத்துடன் இது காதல் இல்லை என்று மறைமுகமாக சுட்ட, பெண் குரலில் வரும் பாடல் வரிகள் காதலோடு உருகுகிறது.​

ஆ​ண் ​: வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியு​ற ​ நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா


பெ​ண்​: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா

தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
​மொ​த்த கத முடிஞ்சதே


#இரண்டாம் _உலகம் #வைரமுத்து #பாடல்

Friday, August 2, 2013

வையகம் வாழவிடு - வைரமுத்து இயற்கையிடம் மனிதருக்காக

சகத்திர ஆண்டு - 2000 (எழில் அண்ணாவால் அறிமுகமான வார்த்தை) பிறக்கும் காலகட்டத்தில் வைரமுத்துவின் இந்தப் பாடல் தான் என் நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடிக்கும்.

ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு

பிறந்த புதிய நூற்றாண்டுக்காக அப்போது 'சக்தி'யில் நான் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலின் பல வரிகளை சிலாகித்து இயற்கையிடம் மனிதத்தின் வேண்டுகோள்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

13,14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு தடவை இந்தப் பாடலை எனது 'சூரிய ராகங்கள்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய நேரமும் இந்தப் பாடல் அதே போல புதிதாக, அதே இனிமையும் , பாடலின் 'இளமையும்' 'புதுமையும்' மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

அதே போல, வைரமுத்து புதிய நூற்றாண்டிடம் வேண்டிய வேண்டுகோள்கள் 'எல்லாமே' இன்னமும் நிறைவேறாமலேயே கிடக்கின்றன.

பாடலின் எல்லா வரிகளும் ரசனையுடையவையாக  ஆழமாக உணர்ந்து மனதோடு இயைந்த சில வரிகளை அன்று கத்தரித்து ஒலிபரப்பியதும், இன்றும் ஞாபகம் வைத்திருப்பதும் கவிஞரின் வெற்றியாக இருந்தாலும், பாடகர் நவீன், உதித்  நாராயணன் பாணித் தமிழ் உச்சரிப்பில் பாடலின் ஜீவனை சிதைத்திருக்கிறார் என்பது கொடுமையிலும் கொடுமை.

தண்ணீரில் மூழ்காது என்பதை 'மூள்காது' என்று பாடிய K.J.யேசுதாசையே கண்டித்துத் திருத்திய கவிஞர் வைரமுத்து, தன் அழகான அர்த்தமுள்ள பாடலின் அர்த்தங்களையே சீரழித்துள்ள பாடகர், அதுவும் புதிய பாடகரைத் திருத்தாமல் விட்டது ஆச்சரியமே...

பாடலின் சரியான வரிகளைத் தரவேண்டும் என்று உன்னிப்பாக அவதானித்து ஓரளவுக்கு இங்கே பதிந்துள்ளேன்.
எனினும் இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளைத் தேடியபோது எல்லா இடங்களிலும் ஒரே மூலப்பிரதியின் பிழைகளோடு அர்த்தங்களே மாறிப்போய்க் கிடப்பதைக் கண்டேன்.

கவிஞர் சரியான வரிகளைத் திருத்திப் பதிவேற்றினால் திருப்தி.
அல்லது கவிஞரின் மகன் கார்க்கி தன் பாடல்களைப் பதிவேற்றுவது போல, தந்தையாரின் பாடல்களையும் தொகுத்தால் மகிழ்ச்சியே.

மனம் ரசிக்கும், மனிதத்தை நேசிக்கின்ற சில முக்கிய வரிகள்...

ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு 
இந்த சொற்களின் வலிமை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.

ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
எங்கள் உலகம் இப்போது தேடும் நிம்மதிக்கான விஷயங்கள் இவை. ஆனால்  சாத்தியமில்லைத் தான்.

பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா

இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா

பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா

இப்போது என் சின்ன மகனின் வாழ்க்கையில் அனுபவரீதியாக உணரும் நிலை.

மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு

இந்த வரிகளில் கவிஞர் சிலிர்க்கவும் வியக்கவும் வைக்கிறார்.
வைரமுத்துவை இன்னொருவர் விஞ்ச முடியுமா என்று ரசிக்க வைக்கிற பல இடங்களில் ஒன்று இது.
நாம் வரும் வாடகை வீடான  பூமியில் நாம் விரும்பும்வரை வாழவிட்டால் என்ன என்ற கேள்வி நியாயமானதே.
ஆனால் யாரிடம் கேட்பது?


படம்: முகவரி
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: தேவா
பாடியவர்: நவீன்


ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு

வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு 

நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத ஒரு பூமியை நீ கொண்டு வா

இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
சாதி பார்க்காமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா

புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு



ஆண்டுகள் கடந்து மறைந்தாலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பாடல் ஒலித்து  பிறகு 
"மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு" 
என்ற வரிகள் ஓயாமல் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைத் தவிர்க்கமுடியாது.


Wednesday, December 12, 2012

ரஜினி 63 @ 12-12-12 12:12 - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 2

அபூர்வ ராகங்களில் ஆரம்பித்து அதிரடி மன்னனாக மாறி, அறுபத்து மூன்றிலும் அயராது திரைப்பயணம் சென்று கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





திரையில் எவ்வளவுக்கெவ்வளவு தனது ஸ்டைலினால் அன்று முதல் இன்று வரை வயது வித்தியாசமில்லாமல் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளாரோ, அதேபோல ரஜினி திரைக்கு வெளியே தனது எளிமையினாலும், இயல்பான நடத்தைகளாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தியிருகிறார்.

அனைவரும் இவருக்கு நண்பர்களே.. 
இதோ பாருங்கள்.... தனது திரையுலக வாழ்க்கையில் ரஜினியின் நண்பர்களை..

ரஜினிகாந்துடன் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு நட்சத்திரங்களும், பெரும் புள்ளிகளும் சேர்ந்து நிற்கும் காலம் கடந்த புகைப்படங்கள்.


பழசை மறக்காத ரஜினி.. நண்பர்களுடன்...


அறிமுகப்படுத்திய குருநாதருடனும் நேரடிப் போட்டியாளரும், நண்பருமான கமலுடனும் 


இல்லறத் துணையை இணைத்துக்கொண்டபோது 


ரஜினி - லதாவை வாழ்த்தும் கமல் -வாணி கணபதி 


 நடிகர் திலகத்துடன்......


அதிக படங்களில் சேர்ந்து நடித்த ஆத்ம நண்பருடன்...
ரஜினியின் வார்த்தைகளில் சொல்வதானால் "திரையுலக அண்ணா"


புரட்சித் தலைவரிடம் விருது வாங்கும் பெருமிதம்...


முள்ளும் மலரும் படப்பிடிப்பில். இயக்குனர் மகேந்திரன், நடிகர் சரத் பாபுவுடன்..


இன்னொரு இனிய நண்பர் இசைஞானியுடன் ஒரு இனிய பொழுதில்...


சப்பாணியும் பரட்டையும்.... 16 வயதினிலே..
"இது எப்பிடி இருக்கு?"


 கலைஞர் கருணாநிதியுடனும் திரைக் கலைஞர் குடும்பத்துடனும்
சந்திரமுகி பட வெற்றிவிழாவில்.. வீரவாள் ஏந்தும் ரஜினி....


எண்பதுகள், தொண்ணூறுகளின் நான்கு நட்சத்திர நாயகர்கள்....
விஜயகாந்த்,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் & சத்யராஜ்


முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன்...


மூத்த மகளின் திருமணத்தில் இப்போதைய தமிழகப் பிரதமர் ஜெயலலிதாவுடன்....


இரண்டு சூப்பர் ஸ்டார்கள்...
அமிதாப்பும் ரஜினியும்.... 


சிரஞ்சீவியுடனும் கமலுடனும் 


தளபதி படப்பிடிப்பில் மணிரத்னம் - ஓம் பூரியுடன்


ஆந்திராவின் நாயகர்களுடன்.. 


அமீர் கானுடன் ஆசையோடு...


பாரதப் பிரதமருடன் பவ்யமாக 


எத்தனை தரம் சந்தித்தாலும் "நினைத்தாலும் இனிக்கும்" & "இளமை ஊஞ்சலாடுகிறது" இருவருக்கும்...


லகானுக்கு  பாசத்தோடு வாழ்த்து...


உலகக் கிண்ண இறுதிப் போட்டியின்போது - இந்திய அணியின் ராசியாக ? :)


நட்சத்திர அணிவகுப்பு...
கே.பாலாஜி, கமல், ஜெய்சங்கர், ரஜினி, விஜயகுமாருடன் 


ஆந்திரப் படவுலக விழாவில்... நட்சத்திரங்கள் & அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் 


 எண்பதுகள், தொண்ணூறுகளின் நட்சத்திரங்கள் சந்தித்த ஒரு நல்ல பொழுதில்.... நாயகராக ரஜினி...

அதிக படங்களின் நாயகியான என்றும் அழகி ஸ்ரீதேவியுடன்....



இசைப்புயலுடனும், கொலைவெறி புகழ், உறவுக்காரப் பையன் அனிருத்துடனும்...

இசைஞானியை மகிழ்வுற வைக்க ஒரு விசில்...


அஜித்-ஷாலினி திருமண நிகழ்வில் தம்பதி சமேதராக..


தனுஷ் மருமகனாக்கிய ரஜினி குடும்பத்தின் முதலாவது திருமண நிகழ்வில்....



படங்களைப் பல்வேறு இடங்களில் சுட்டு எடுத்துள்ளேன்....
அவற்றை இணையம் ஏற்றி எனக்கும் உதவியிருந்த இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் நலன்விரும்பி நட்புக்களுக்கு நன்றிகள்.

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin